அல்லாஹ்” என்ற வார்த்தையின் அறிமுகம்:
படைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது.. இவ்வார்தையின் உண்மைப்பொருள் ‘வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது. ஆங்கிலத்தில் காட், தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது போல் அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் வார்த்தைதான் அல்லாஹ்! எனினும் மற்ற மொழி வார்த்தைகளோடு ஒப்பிடும் போது இவ்வார்த்தையின் சிறப்பு என்னவென்றால், இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பாலும் கிடையாது, பன்மையும் கிடையாது என்பதே. எப்போதும் இது ஒருமையிலேயே விளங்கும்.
“அல்லாஹ்” என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய சொல் என்று நினைத்து விட வேண்டாம். “இறைவன்” அல்லது “கடவுள்” என்கிற தமிழ் சொல் எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ, அதே போல் “அல்லாஹ்” என்கிற சொல்லும் எல்லோருக்கும் பொதுவானதுதான். அரபு மொழி பேசும் கிறிஸ்துவர்களும், யூதர்களும் கூட தங்கள் தாய் மொழியான அரபியில், இறைவனை “அல்லாஹ்” என்றுதான் அழைப்பார்கள்.
இதை புரிந்து கொள்ள அரபிக் பைபிளை புரட்டினால் போதும். ஆதியாகமம் 1:1 அரபியில் கீழே:
في البدء خلق الله السموات والارض
الله enbadhu thaan “அல்லாஹ்”.
அடுத்ததாக உங்கள் கேள்விக்கு இன்னும் தெளிவான விடை அறிய, அரபு மொழி இலக்கணம் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். “அல்லாஹ்” என்பது ஒரு அரபி வார்த்தை என்பதை அறிந்தோம். ஆங்கிலத்தில் மூன்று பாலினங்கள் உள்ளன, ஆண்(Masculine), பெண் (Feminine), ஆண், பெண் அல்லாத பொதுவானது (Neutral Gender).இதனை குறிக்க he, she, it போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆண், பெண் வகையில் சேராதவைகளை “it” என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள்.
அரபு மொழியில், இரண்டே இரண்டு பாலினங்கள் தான் உள்ளன. ஆண்(Masculine) மற்றும் பெண் (Feminine). எந்த வார்த்தையாக இருந்தாலும் சரி, அது ஒன்று ஆண் பாலினமாகவோ, அல்லது பெண் பாலினமாகவோ தான் பயன்படுத்தப்படும்.
அரபு இலக்கணத்தில், ஒரு வார்தையை பெண் பாலினத்தில் சொல்ல சில விதிகள் உள்ளன. இது அரபு மொழிக்கே பொதுவான விதி. அவை:
1) இயற்கையிலேயே அந்த வார்த்தை பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இருத்தல். உதாரணம்: தாய். அரபு மொழியில் “உம்முன்” என்ற தாயை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
2) “இருமையை” குறிக்கும் சொற்கள் பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: இரண்டு கண்கள். அரபு மொழியில் “ஐனைன்” என்ற இரண்டு கண்களை குறிக்கும் சொல், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
3) வார்த்தை “தா” என்ற அரபி எழுத்து கொண்டு முடிந்தால், அந்த வார்த்தை பெண் பாலினத்தில் சொல்லப்படும். உதாரணம்: அரபியில் மின்விசிறியை குறிக்கக் கூடிய “மிர்வதுன்.” என்ற சொல் “தா” என்ற அரபி எழுத்து கொண்டு முடிவதால், பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
4) “பெரிய அலிப்” எழுத்து ஒரு வார்த்தையின் இறுதியில் வருதல். இந்த வார்த்தைகளும் பெண் பாலினத்தில் சொல்லப்படும்.
இப்போது அல்லாஹ் என்கிற சொல், மேலே கூறிய விதிகளுக்கு கட்டுப்பட்டால்தான், பெண் பாலினத்தில் சொல்ல இயலும்.
அல்லாஹ் என்கிற சொல் இயற்கையிலேயே பெண் பாலினத்தை குறிக்கக் கூடியதாக இல்லை.
அல்லாஹ் என்கிற சொல் இருமையை குறிக்காது. மாறாக அது ஒருமைக்குரிய சொல்.
அல்லாஹ் என்கிற சொல் “தா” என்ற அரபி எழுத்து கொண்டு முடியவில்லை.
அல்லாஹ் என்கிற சொல் “பெரிய அலிப்” என்ற எழுத்து கொண்டு முடியவில்லை.
எனவே, அல்லாஹ் என்கிற சொல் பெண் பாலினத்திற்குரிய எந்த விதிக்கும் கட்டுப்படவில்லை. அரபு மொழியில்,இரண்டே இரண்டு பாலினங்கள் மட்டும் உள்ள காரணத்தினால், பெண் பாலில் சொல்ல முடியாத சொல்லை, ஆண் பாலில்தான் சொல்ல முடியும்.
ஆகவே, அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் பயன்படுத்தப்படுகிறது. திருக்குர்ஆன் அரபு மொழியில் அருள்ளப்பட்டதால், மொழிபெயர்க்கும் போது, அரபியில் உள்ளபடி ஆண் பாலிலேயே மொழிபெயர்த்துள்ளனர். எனவே தான், திருக்குர்ஆனில் இறைவனை குறிப்பிடும் போது “அவன்” என்ற ஆண் பால் பதம் பயன்படுத்தப்பட்டும்.
அரபிக் பைபிளின் ஆதியாகமம் 1:31 வசனத்தை வாசித்தாலும் இந்த விதி குறித்து அறிய முடியும்.
ورأى الله كل ما عمله فاذا هو حسن جدا (ஆதியாகமம் 1:31) (http://www.arabicbible.com/ot-text/79-genesis/167-genesis-1.html)
மேலே உள்ள அரபு பைபிள் வசனத்தில் الله (அல்லாஹ்) என்கிற வார்த்தை இடம் பெறுவதை நீங்கள் காணலாம். அல்லாஹ் செய்த செயல் என்பதை குறிக்க عمله (அமலுஹு) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. “عمله” என்ற வார்த்தைக்கு, “அவன் செய்த செயல்” என்று பொருள். அவன் என்ற பொருளை தரக் கூடிய ه (ஹு) என்ற சொல் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் காணலாம். இதை பெண் பாலில் சொல்லவேண்டும் என்றால், அமலுஹா என்று சொல்ல வேண்டும். அல்லாஹ் என்கிற சொல் ஆண் பாலில் தான் சொல்ல முடியும் என்பதால் அமலுஹு (அவன் செய்த செயல்) என்று ஆண் பாலில் சொல்லப்பட்டுள்ளது.